Thursday, May 21, 2015

அரசு தரும் டிஜிட்டல் லாக்கர்

  1. மத்திய அரசின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை, பொதுமக்களுக்கு தங்கள் ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திட, டிஜிட்டல் லாக்கர் வசதியை வழங்குகிறது. அது எப்படி ஆவணங்களைக் கொண்டு போய், க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்கும் ஒரு லாக்கரில் வைக்க முடியும்? என்ற கேள்வி எழுகிறதா? மேலே படியுங்கள். 
  2. இந்த டிஜிட்டல் லாக்கர் வசதியைப் பெற உங்களுக்கென ஆதார் அட்டை மற்றும் மொபைல் போன் எண் இருக்க வேண்டும். ஆதார் அட்டை எண்ணுடன் இந்த லாக்கர் வசதி இணைக்கப்படும். இந்த லாக்கரில், உங்கள் ஆவணங்களின் மின்னணு நகல்களைப் பாதுகாப்பாக வைக்கலாம். அரசின் பல்வேறு துறைகள் உங்களுக்கு வழங்கும் டிஜிட்டல் ஆவணங்களையும் இதில் சேவ் செய்து வைக்கலாம். இதில் உள்ள ஆவணங்களில், நீங்கள் உங்கள் மின்னணு கையெழுத்தினையும் (e-signature) போடலாம்.
  3. இதனைப் பெற                   https://www.digilocker.gov.in/    என்ற தளத்திற்குச் செல்லுங்கள். உங்கள் பிரவுசர் இந்த தளத்தின் பாதுகாப்பு குறித்து சந்தேகச் செய்தி தரும். அதனைப் புறக்கணித்து தொடரவும். ஏனென்றால், அரசு இந்த தளத்திற்கான பாதுகாப்பு சான்றிதழைப் பெறவில்லை என்று தெரிகிறது.முதலில், உங்களைப் பற்றிய தகவல்கள், ஆதார் எண், மொபைல் போன் எண் மற்றும் மின் அஞ்சல் முகவரி போன்ற தகவல்களைத் தரவும். உங்களுக்கான டிஜிட்டல் லாக்கர் தரப்படும் பணியில் ஒன்றாக, உங்கள் மொபைல் போனுக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பாஸ்வேர்ட் ஒன்று வழங்கப்படும். இந்த பாஸ்வேர்ட் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கும் வழங்கப்படும். இதனை தளத்தில் அதற்கெனத் தரப்பட்டுள்ள இடத்தில் அமைத்து on “Validate OTP” என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். உங்களுக்கான டிஜிட்டல் லாக்கர் தரப்படும். பின்னர், உங்கள் யூசர் நேம், பாஸ்வேர்ட் கொடுத்து, டிஜிட்டல் லாக்கரை இயக்கலாம். 
  4. உங்கள் ஆவணங்களை மின்னணு நகலாக, XML பார்மட் பைலாக இதில் சேமித்து வைக்கலாம். சான்றிதழ் நகல்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் பெயர், பெற்ற நாள் கொண்டு பைலின் பெயரை அமைக்கவும். இதன் மூலம், நாம் நம் விண்ணப்பங்களுடன், சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டியதில்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கு, இந்த டிஜிட்டல் லாக்கர் எண்ணைத் தந்துவிட்டால், அவர்கள் இந்த ஆவணங்களைப் பெற்று சரி பார்த்துக் கொள்ளலாம். இதனால், தேவையற்ற வகையில் டாகுமெண்ட் நகல்களை இணைத்து எதற்கும் விண்ணப்பிக்க தேவை இல்லை. 
  5. இதில் பதிந்தவுடன் ஒவ்வொருவருக்கும் ஒரு Issuer ID வழங்கப்படும். இது வழங்கப்பட்ட பின்னர், அவர் தன் ஆவணங்களை XML பார்மட்டில் பதியலாம். பதியப்படும் ஒவ்வொரு ஆவணத்திற்கும் ஒரு uniform resource identifier (URI) தரப்படும். அது நம் ஆதார் எண்ணுடனும் இணைக்கப்பட்டிருக்கும். நம் ஆவணங்களைக் காட்ட விரும்புபவருக்கு இந்த முகவரியைத் தரலாம். அவர் இதே போல, பயனாளராக ஓர் அக்கவுண்ட் திறந்து ஆவணங்களைப் பார்வையிடலாம். ஒவ்வொருவருக்கும் 10 எம்.பி. இடம் கொண்ட டிஜிட்டல் லாக்கர் தரப்படுகிறது. 
  6. அரசு அண்மையில் தான் இந்த திட்டத்தினைக் கொண்டு வந்துள்ளது. இதனைச் சோதனை முறையில் மட்டுமே பயன்படுத்திப் பார்க்கலாம். இது முழுமையான பின்னர், இது குறித்த மத்திய அரசின் ஆணை வெளியிடப்படும். இதன் வெற்றி, நம் அரசு துறைகள் மற்றும் நம்மிடம் உள்ளது.கூடுதல் தகவல்களை என்னும் இணைய தளம் செல்லவும்.

Saturday, January 17, 2015

தமிழ் மாஸப் பெயர்கள் எப்படி வந்தன?





காஞ்சி மஹா பெரியவாள் உரையிலிருந்து

ஆங்கில மாதம் என்றால் அது ஜனவரி,பிப்ரவரி என துவங்குகின்றன. தமிழ் மாஸம் என்பது சித்திரை, வைகாசி எனத் துவங்குகின்றன. இதற்கான பெயர் காரணத்தை இனி காண்போம்.பெரும்பாலும் ஒரு மாஸத்தில் பௌர்ணமி அன்று எந்த நக்ஷத்திரமோ அதுவே அந்த மாஸத்தின் பெயராக இருக்கும் அனேகமாக அன்றைக்கு ஒரு பண்டிகையாகவும், விழாவாகவும் இருக்கும்.

1. சித்திரை மாஸம்
சித்திரை மாஸத்தில் சித்ரா நக்ஷத்திரத்தன்றுதான் பௌர்ணமி வரும் அதனால் சித்திரை மாஸம் என்றானது.

2. வைகாசி மாஸம்
விசாக சம்மந்தமான வைசாகம்.விசாக நக்ஷத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி ஏற்படுகிற மாசம் தான் வைசாகி. மதுரை என்பது மருதை என திரிவது போல் சமஸ்கிருத வைசாகி தமிழில் வைகாசி ஆயிற்று.

3. ஆனி மாஸம்
அனுஷ நக்ஷத்திர சம்மந்தமானது ஆனுஷீ. அந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுகிற மாஸம் ஆனுஷீமாஸம். தமிழில் ஷ என்ற எழுத்து உதிர்ந்து ஆனி என்றாயிற்று.

4. ஆடி மாஸம்
ஆஷாட நக்ஷத்திரத்தில் பூர்வ ஆஷாடம்,உத்தர ஆஷாடம் என்று இரண்டு. பூர்வம் என்றால் முன்,உத்தரம் என்றால் பின். பூர்வ/உத்தர ஆஷாடம் என்பதில் உள்ள அந்த ர்வ என்ற கூட்டெழுத்து சிதைந்தும்.ஷ உதிர்ந்தும் தமிழில் பூராடம் உத்திராடம் என்கிறோம். இந்த இரு நக்ஷத்திரங்களில் ஒன்றில் பௌர்ணமி வரும் மாதம் ஆஷாடி. இதில் ஷா உதிர்ந்து ஆடி ஆயிற்று.

5. ஆவணி மாஸம்
ச்ராவணம் என்பது ச்ரவண நக்ஷத்திரத்தை குறிக்கும். முதலில் உள்ள ச்ர அப்படியே தமிழில் drop ஆகி வணத்தை ஓணம் என்கிறோம். அது மஹாவிஷ்னுவின் நக்ஷத்திரமாதலால் திரு என்ற மரியாதை சொல்லை சேர்த்து திருவோணம் என்கிறோம். அனேகமாக பௌர்ணமி ச்ராவண நக்ஷத்திரத்தில் வருவதால் ச்ராவணி எனப்படும். இதில் சமஸ்கிருதத்திற்கே உரிய ச்,ர என்ற கூட்டெழுத்து drop ஆகி ஆவணி மாதமாயிற்று.

6. புரட்டாசி மாஸம்
ப்ரோஷ்டபதம் என்பதற்கும் ஆஷாடம் என்பதற்கும் ஆஷாடம் போலவே பூர்வமும் உத்தரமும் உண்டு. பூர்வ ப்ரோஷ்டபதம் தான் தமிழில் பூரட்டாதி ஆயிற்று. அஷ்ட என்பது அட்ட என திரிந்தது. உத்திர ப்ரோஷ்டபதம் என்பது உத்திரட்டாதி ஆயிற்று. இந்த நக்ஷத்தில் பௌர்ணமி ஏற்படுவதால் ப்ரோஷ்டபதி என்பது திரிந்து புரட்டாசி ஆயிற்று.

7. ஐப்பசி மாஸம்
ஆச்வயுஜம்,அச்வினி என்பதை அச்வதி என்கிறோம். அதிலே பௌர்ணமி வருகிற ஆச்வயுஜீ அல்லது ஆச்வினீ தான் திரிந்து ஐப்பசி ஆயிற்று.

8. கார்த்திகை மாஸம்
க்ருத்திகை நக்ஷத்திரம் தான் கார்த்திகை. இந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுவதால் அது கார்த்திகை மாதமாயிற்று.

9. மார்கழி மாஸம்
மிருகசீர்ஷம் என்பது மார்கசீர்ஷி என்றாயிற்று. இதில் பெரும்பாலும் பௌர்ணமி வரும் மாதம் மார்கசீர்ஷி என்றாயிற்று.அதில் சீர்ஷி என்பது மறுவி மார்கழி என்றாயிற்று.

10. தை மாஸம்
புஷ்யம் தான் தமிழில் பூசம் .புஷ்ய சம்மந்தமானது பௌஷ்யம். புஷ்யத்திற்கு திஷ்யம் என்றும் பெயர்.பௌர்ணமி திஷ்யத்திலே வரும் மாதம் தைஷ்யம்.அதிலே கடைசி மூன்று எழுத்துக்களும் போய் தை என்றாயிற்று.

11. மாசி மாஸம்
மக நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருவதால் மாகி என்றாயிற்று. இதில் கி என்பது சி யாக மருவி மாசி ஆயிற்று.

12. பங்குனி மாஸம்
பூர்வ பல்குனியை பூரம் என்றும் உத்தர பல்குனியை உத்திரம் என்கிறோம். இந்த இரு நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருவதால் பல்குனி எனப்படும். அதில் ல எழுத்து மருவி பங்குனி ஆயிற்று.


இப்படி சம்ஸ்கிருத வார்த்தைகளே மருவி தமிழ் மாஸப்பெயர்களாக அமைந்துள்ளன.